AI illustration by Surya for the Tamil poem Maunam by Thamizhachi Thangapandian

மௌனம்

இயற்கையெனும்
எழுது பொருளில்
இன்று மரங்களைப் பற்றிய கவிதை என
அறிவிக்கப்படுகிறது
அந்தக் கவியரங்கில்

இளம் பெண்ணொருத்தியின்
முதல் முத்தமாய்
உன் வசந்தகாலத் துளிரைப்
போகி வர்ணிக்கிறான்

எங்குமிருக்கின்ற பெருஞ்சூன்யத்தில்
ஓர் உட்சூன்யமாய்
உன் இலையுதிர் கால
வெறுமையினை
யோகி தரிசிக்கின்றான்

உள்ளும் புறமும் தகித்து
ஒடுங்கும் உலர்தலாய்
உன் கோடையின் வெம்மையை
ரோகி உருவகிக்கிறான்

விதைக்குள் மூச்சடக்கி
பெருவெளிக்குள்
உயிர் விரிக்கும்
பிரணாயாமப் பெருவித்தைக்காரனாய்
உனை ஞானி உணர்கிறான்

கரும்பச்சை இலை
இளஞ்சிவப்பாய் மாறுகின்ற
உன் கணநேர ரசவாதம்
புரியாமல் தடுமாறும் நானோ

படிமங்களின் ஆடைகளற்ற
உன் நிர்வாணத்தை
வார்த்தையெனும்
ஏவாளின் ஆப்பிள்
மூடாதிருக்கட்டும்
எனும் பிராத்தனையுடன்
பேசாதிருக்கிறேன்
மிகச்
சாமான்யமானவனா(ளா)ய்

പ്രതിഭാവം വാട്സ്ആപ്പ് ഗ്രൂപ്പിലേക്കു സ്വാഗതം🌹